search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்ன வெங்காயம்"

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோவை:

    தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

    கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் வரத்துடன் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கோவைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன்கள் பெரிய வெங்காயமும், சுமார் 100 டன்கள் சின்ன வெங்காயமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தபோது அதனுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. கடந்த டிசம்பர் முதல் வாரம் வரையிலும் கூட கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலையில் கடந்த சில நாட்களாக தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் சின்னவெங்காயத்தின் விலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.35-க்கும், அதிகபட்சம் ரூ.38-க்கும் விற்பனையானது. அதேபோல் சரிவை சந்தித்து வரும் பெரிய வெங்காயமும் குறைந்தபட்சம் ரூ.25-க்கும், அதிகபட்சம் ரூ.29-க்கும் விற்பனையானது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரத்து அதிகரித்து இருப்பதால் வெங்காயத்தின் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:-

    சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலத்தின் பல பகுதியில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் காய்கறிகளின் விலை சரிவடைய தொடங்கி உள்ளது.

    நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாத வேளாண் விளை பொருட்களை எந்த வழியிலாவது விற்பனை செய்ய வேண்டி உள்ளது. எனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை விலக்கிக் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.
    • கார்த்திகை, ஐப்பசி மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமன்றி நல்ல தரமான சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை சாதகமாக உள்ளதால், நல்ல விளைச்சலை கொடுத்து வருகிறது.

    ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். அனைத்து சமையலுக்கும் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் அதற்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. எனவே விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். இதற்கிடையே புரட்டாசி பட்டத்தில் நடவு செய்த சின்ன வெங்காயம் தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உரிய விலை இல்லாததாலும், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததாலும், சின்ன வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது. இது குறித்து சின்ன வெங்காய விவசாயி வேலுமணி கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிட விதை வெங்காயம் ரூ.30 ஆயிரம், உரம் இடுவதற்கு ரூ.15 ஆயிரம், பூச்சி மருந்து அடிப்பதற்கு ரூ.15 ஆயிரம், களைகள் எடுக்க ரூ.20 ஆயிரம் என சுமார் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. இந்த பகுதிகளில் ஓரளவு தண்ணீர் வசதி இருந்தும் பருவ நிலை மாற்றத்தால் சின்ன வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. நல்ல விளைச்சல் என்றால் ஒரு ஏக்கருக்கு சுமார் 7 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால் விளைச்சல் குறைந்துள்ளது.

    இதனால் ஒரு ஏக்கருக்கு சுமார் 3 டன் முதல் 4 டன் வரை மகசூல் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்காயம் விலை குறைந்ததால் சென்ற வாரம் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் கொடுத்து எங்களிடம் கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்பொழுது கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை தருகிறார்கள். இதனால் வெங்காய விவசாயத்தில் போட்ட முதலீடு திரும்ப கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் இதுகுறித்து விவசாயி தங்கவேல் கூறியதாவது:-

    சின்ன வெங்காயத்தை ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யலாம். இதனால் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.80க்கு விற்பனையானது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.

    இந்த நிலையில் கார்த்திகை, ஐப்பசி மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும். இதனை எதிர்பார்த்து சின்ன வெங்காய விவசாயிகள் இருப்பு வைத்திருந்தோம். ஆனால் பருவ நிலை மாற்றத்தால் மழை காலம் மாறி பெய்கிறது. இதனால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்பொழுது புரட்டாசி மாதத்தில் நடவு செய்த வெங்காயமும் சந்தைக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்டு இருப்பு வைத்த வெங்காயத்திற்கு தற்பொழுது உரிய விலை கிடைக்கவில்லை. எனவே வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து ஒவ்வொரு முறையும் தடைகளையும், வரிகளையும் விதித்து சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    சின்ன வெங்காயத்திற்கு உற்பத்தி செலவு குறைந்தபட்சம் 30 ரூபாயாக இருந்து வருகிறது. குறைந்தபட்ச லாபத்தோடு 45 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாக கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட 40 சதவீத வரியும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையும் சின்ன வெங்காய விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் தள்ளிவிடும். மத்திய அரசு சின்ன வெங்காய உற்பத்திக்கு எவ்வித மானியமும் அளிப்பதில்லை. விலை நிர்ணயமும் கிடையாது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கு தனித்தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண்டும். சின்ன வெங்காயம் பயிரிட்டு உரிய விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டு உள்ள விவசாயிகளிடமிருந்து மத்திய, மாநில அரசுகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    • காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .
    • காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    முத்தூர்:

    காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள்,வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள்,மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள் ,தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.

    நேற்று கூடிய வார சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.90-க்கும், தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.40 அதிகரித்து காணப்பட்டது. பெரிய வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.30 குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக வெங்காயத்தின் விற்பனை சற்று மந்தமாகவே காணப்பட்டது.

    • தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது.
    • பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது. இதனால் அதன் விலை உச்சம் அடைந்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.80வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    • சின்ன வெங்காயத்தை தேடித்தேடி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் சின்ன வெங்காயம் முதல் தரம் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கிறது
    • இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் கீரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    ஐப்பசி பிறப்பு, அடுத்தடுத்த சுபமுகூர்த்த தினங்கள் வருகையால் உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க கூட்டம் அதிகரித்துள்ளது.சின்ன வெங்காயத்தை தேடித்தேடி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் சின்ன வெங்காயம் முதல் தரம் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கிறது. இரண்டாம் தரம் 70 முதல் 80 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

    இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் கீரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 5 முதல் 6 ரூபாய்க்கு விற்கும் கீரை விலை, ஒரு ரூபாய் உயர்ந்து 7 ரூபாயாகியுள்ளது.இதனால் மொத்தமாக வாங்குவோர் குறைந்த அளவே கீரை வாங்கி செல்கின்றனர்.  

    • கோயம்பேடு மார்க்கெடுக்கு தினசரி 40 முதல் 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் மழை பாதிப்பு காரணமாக அறுவடை செய்வது தள்ளி போகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.

    தற்போது வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ. 34-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை ரூ.54 ஆக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 ஆக எகிறி உள்ளது.

    வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளதால் ஓட்டல்களில் பெரிய வெங்காயத்தின் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது.

    வெங்காயம் விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெடுக்கு தினசரி 40 முதல் 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அதன் வரத்து குறைந்து வருகிறது. இன்று மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது.

    உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் மழை பாதிப்பு காரணமாக அறுவடை செய்வது தள்ளி போகிறது. மேலும் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த அளவிலான வெங்காயம் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மார்க்கெட்டுக்கு பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும், அவரைக்காய் ரூ80-க்கும் விற்கப்படுகிறது.

    • குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
    • தீபாவளி பண்டிகை நெருங்கும்போது காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    பெங்களூருவில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம், பல்லாரியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஏற்கனவே பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டிருந்தது.

    அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் வெங்காயத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. இன்று மேலும் ரூ.20 உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. பல்லாரி ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆகி வந்தது.

    கடந்த வாரம் ரூ.30-ஆக உயர்ந்திருந்த நிலையில் நேற்று கிலோ ரூ.38-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் ரூ.7 உயர்ந்து கிலோ பல்லாரி ரூ.45-க்கு விற்பனையானது. பீன்ஸ் கடந்த சில நாட்களாகவே கிலோ ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளரிக்காய், சேனைக்கிழங்கு விலையும் அதிகமாக உள்ளது.

    குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வெள்ளரிக்காய் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளரிக்காய்களின் வரத்து குறைய தொடங்கியதால் விலை உயரத் தொடங்கியுள்ளது.

    ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.50-க்கு விற்பனையானது. இதேபோல் சேனை விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ சேனைக்காய் ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலையை பொறுத்தமட்டில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த சில நாட்களாகவே ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகி வருகிறது.

    கேரட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.35, முட்டைகோஸ் ரூ.20, தடியங்காய் ரூ.20, மிளகாய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, கத்தரிக்காய் ரூ.60, பாகற்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக தீபாவளி பண்டிகை நெருங்கும்போது காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படும். குறிப்பாக பல்லாரி, சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். அதேபோல தான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்னும் சின்ன வெங்காயம், பல்லாரியின் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

    • சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுவதால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.
    • சின்ன வெங்காயத்தின் இந்த திடீர் விலை உச்சம் இல்லத்தரசிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய மார்க்கெட் நடந்து வருகிறது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில் தரகு மண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் வெங்காய மார்க்கெட் நடந்து வருகிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்தும், வேடசந்தூர், குஜிலியம்பாறை, அய்யலூர், எரியோடு, கோவிலூர், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    சாம்பார் காய் எனப்படும் சின்ன வெங்காயம் காரம் அதிகம் உள்ளதால் வீட்டு சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை திடீர் உச்சமடைந்தது. மொத்த மார்க்கெட்டில் 3 ஆயிரம் மூடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட. நிலையில் கிலோ ரூ. 90க்கு விற்கப்பட்டது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.

    திண்டுக்கல் சில்லறை கடைகளில் மூன்று தரங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது புது காய்களின் வரத்து அறவே இல்லாத நிலையில் பட்டறை காய் எனப்படும் பழைய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனால் திடீர் விலையேற்றம் உள்ளது. இதுவும் வரத்து குறைந்ததால் இன்னும் விலை உச்சத்தை தொடும். தற்போது கிலோ ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்கப்படுகிறது என்று சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சின்ன வெங்காயத்தின் இந்த திடீர் விலை உச்சம் இல்லத்தரசிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    • இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது.
    • சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை.

    உடுமலை:

    சின்ன வெங்காய ஏற்றுமதி முடங்கி கிடப்பதைத் தவிா்க்க அதற்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த வெள்ளக்கோவில் ஆா். பி. சாமி கூறியதாவது:-

    இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதில் வெங்காயம் என்பது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் ஒன்றாகவே உள்ளது. பெரிய வெங்காயம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை ஏற்றத் தாழ்வு என்பது இந்திய அளவிலான பிரச்னையாகும்.

    ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து, ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ்நாட்டு சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    ஏற்றுமதி செய்யப்படும் போது கொடுக்கப்படும் குறியீட்டு எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் குறைந்தபட்ச உற்பத்திச் செலவு 30 ரூபாயாகும். விவசாயிகள் கிலோ ரூ. 45க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய ஏற்றுமதி வரி விதிப்பு கிலோவுக்கு 20 ரூபாயைக் குறைத்துள்ளது.

    சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. நஷ்டத்துக்கு நிவாரணமும் இல்லை. அப்படியிருக்க வரி விதிக்க எவ்வித தாா்மீக உரிமையும் கிடையாது. கஷ்டப்படும் விவசாயிகளைக் கண்டு கொள்ளாமல், நுகா்வோரை மட்டுமே அரசு கருத்தில் கொள்கிறது.

    ஏற்றுமதி தரத்தில் சந்தை நிலவரத்தை அனுசரித்து கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் வியாபாரிகளும் தவித்து வருகின்றனா்.

    எனவே, வரி விதிப்பை ரத்து செய்வதுடன், சின்ன வெங்காயத்துக்கு தனியாக ஏற்றுமதி குறியீட்டு எண்ணையும் விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.

    • விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சின்ன வெங்கயம் அதிக அளவில் பயிரிட்டிருந்ததால், விரைவாக அவற்றை எடுத்து மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக சின்ன வெங்காயம் விலை ரூ.70 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். செங்கோட்டையை அடுத்த இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராம பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் செய்யவேண்டிய சின்ன வெங்காயம் சாகுபடியானது தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்துவிட்டது. அங்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள சுமார் 500 ஏக்கர் அளவிலான நிலங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். 2 மாத பயிரான சின்ன வெங்காயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

    விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு உழுவது, பயிரிடுவது, பூச்சிக்கு மருந்து அடித்தல், உரம் களையெடுத்தல், மழை பொய்த்தால் விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சல் உள்ளிட்ட வகையில் அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகிறது.

    அதற்கு தகுந்த மாதிரி அறுவடை தொடங்கிய காலத்தில் சென்ற மாதம் விலை ரூ.140 வரை விலை கிடைத்ததால் லாபகரமாக இருந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்த சின்ன வெங்காயம் ரூ.70-க்கும் விலை போகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். மழை காலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×